நேரத்தின் அருமையை உணர்த்திய குரூப்- 1 தேர்வு
காலம், நேரத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு உணர்த்தியது.
டிஎன்பிஎஸ்சி மூலம் இன்று குரூப் 1 தேர்வு நடைபெற்றது. தேர்வுக்காக காலை 9 மணிக்கு தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் 9.15 மணிக்கு பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தேர்வு முடிந்து 1.15க்கு பிறகே தேர்வு மையத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இன்று காலை தேர்வு தொடங்கியது.
காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி தேர்வு மையத்தில் காலை சரியாக 9.15 மணிக்கு தேர்வு அலுவலர்களால் கதவு மூடப்பட்டது. சிறு மணித்துளிகளே காலதாமதமாக வந்த தேர்வர்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர்.கடந்த ஜனவரியில் வெளியான தேர்வு அறிவிப்புக்குப் பின் பல மாதங்களாக பல மணி நேரம் தேர்வுக்கு செலவழித்த மாணவர்கள் சிறு மணித்துளிகளில் தேர்வு எழுத முடியாமல் இளைஞர்கள் , இளம் பெண்கள் கடின மனநிலையுடன் திரும்பியது பார்ப்போரை கண்கலங்க செய்தது. மேலும் நேரத்தின் அருமையையும் உணர செய்வதாக அமைந்தது.