திமுக கூட்டணிக்கு பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றம் ஆதரவு
Erode news, Erode news today- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றம் (எஸ்பிசி) ஆதரவு அளிக்கும் என மாமன்ற மாநிலச்செயலாளர் ஜோ டேவிட் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. தலைவர்கள், அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு அளித்து வருகிறது.
அந்த வகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்கு பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றம் (எஸ்பிசி) ஆதரவு அளிக்கும் என மாமன்ற மாநிலச் செயலாளர் ஜோ டேவிட் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் எஸ்பிசி கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்பிசியின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற, திமுக உறுதி அளித்தது. எங்களின் குறைகளை முதல்வர் அனுதாபத்துடன் கேட்டறிந்தார். எனவே, எங்களின் பல பிரச்சனைகளை தீர்க்க அவர் உதவுவார் என நம்புகிறோம்.
நமது கல்லறைகள், தேவாலயங்கள் கட்டுவதற்கான என்ஓசி, தலித் கிறிஸ்தவர்களின் பிரச்சனைகள், தேவாலயங்களில் மராமத்து பணிகள் போன்றவற்றில் சிறுபான்மையினர் குறை தீர்க்கும் கூட்டங்களில் ஆண்டுதோறும் எங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகிறோம். எங்களின் பிரச்சனைகளில் முதல்வர் படிப்படியாக தீர்வு காண்பார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, ஏ.வ.வேலு, கீதா ஜீவன், கே.என.நேரு ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.