திண்டுக்கல் ஸ்ரீ மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம்
ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லினால் அமையப் பெற்ற பெருமைக்குரிய 32 அடி உயரமுள்ள விநாயகர்
HIGHLIGHTS
திண்டுக்கல் கோபாலசமுத்திரம் கரையில் ஸ்ரீ அருள்மிகு 108 நன்மை தரும் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோயிலில் 32 அடி உயரமுள்ள 200 டன் எடை கொண்ட ஸ்ரீமகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் எழுந்தருளி உள்ளார். மேலும்,108 விநாயகர் இந்திரு கோவில் உள்பிரகாரத்தில் அமைந்து உள்ளார். ஸ்ரீ கைலாய நாதர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ முருகன், ஸ்ரீ தேவி கருமாரியம்மன் உள்ளிட்ட பல தெய்வங்களும் இந்த திரு கோவில் தொய்வங்களாக உள்ளன.
வருடம்தோறும் விநாயகர் சதுர்த்தியன்று இக்கோவிலில் மிக சிறப்பான அபிஷேகங்கள், வழிபாடு மற்றும் தீபாரதனை நடைபெறுவது வழக்கம். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஸ்ரீ விநாயகரை வழிபட்டு செல்வார்கள். கொரோனா கட்டுப்பாட்டின் காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் கோவில்களை திறக்கக்கூடாது என அறிவித்துள்ளது.
இந்த வருடம் செப்டம்பர் 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இயலாது. இதனால் ஸ்ரீ மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு முன்கூட்டியே சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு கோவில் திருத்தலத்தில் நடைபெற்றது.
அரிசி மாவு, பால், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர் மாபொடி ,உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் ஸ்ரீகைலாசநாதருக்கு பால் மற்றும் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 32 அடி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.இதுகுறித்து, கோவில் நிர்வாகியான ஸ்ரீ நன்மை தரும் விநாயகர் பக்தன் மருதநாயகம் கூறியதாவது: 1967-ம் வருடம் சிறியதாக வெறும் எட்டணாவை வைத்து பூஜை பூஜை செய்து விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடினோம்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு ஊர் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கொடுத்த நன்கொடையால் இக்கோயில் தமிழகத்திலேயே மிகவும் சிறப்பு மிக்க ஆலயமாக உருவாகி உள்ளது. இங்கு ஸ்ரீ விநாயகரை மனமுருகி வணங்கினால் திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக பக்தர்களே சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். இந்து மக்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இங்கு வருகை புரிந்து விநாயகரை வழிபட்டு செல்வது மிகுந்த சிறப்புக்குரியதாகும்.
மேலும், இக்கோவிலில் உள்ள தங்கத் தேரை அனைத்து சாதி இன மக்களும் வழிபட்டு மண்டகப்படியை ஏற்று நடத்தி வழிபட்டு வருகின்றனர். இக்கோவில் திண்டுக்கல் மாநகரத்தில் ஜாதி,மத பேதமில்லாமல் வணங்கி வருவது சமூக ஒற்றுமைக்கு இலக்கணமாக இக்கோவில் திகழ்ந்தது என்றால் அது மிகையாகாது. எந்த நல்ல செயல்கள் செய்வதாக இருந்தாலும், இக்கோவிலில் ஸ்ரீவிநாயகரிடம் திருவுளச் சீட்டு போட்டு உத்தரவு கிடைத்த பின் தான் நான் செயல்பட்டு வருகிறேன். ஒருமுறை இத்திருத்தலத்திற்கு பக்தர்கள் வருகை புரிந்தால் இக்கோவிலின் மகிமையை உணர்வார்கள் என பெருமிதத்துடன் தெரிவித்தார். இக்கோவிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.