துப்புரவு பணியாளர்கள் கடலூர் மாநகராட்சி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம்
இழிவாக பேசிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
கடலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு ஆய்வு செய்ய இருந்தார். இந்தநிலையில் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகளை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் வந்த நகராட்சி நிர்வாக இணை இயக்குனரை சந்திக்க கூடியிருந்த துப்புரவு பணியாளர்களை நகர்நல அலுவலர் அரவிந்த ஜோதி ஒருமையில் பேசி திட்டியதாக கூறி கடலூர் மாநகராட்சி வாயில் முன்பு அமர்ந்து துப்புரவு பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய போதும் நகர் நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து இணை இயக்குநர் விஜயகுமார் அவர்களிடம் துப்புரவு பணியாளர்கள் ஒருமையில் பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் இழிவாக நடத்தப்படுகின்றனர் என்றும், கடலூர் மாநகராட்சியில் குப்பை கொட்ட இடமில்லாததால் செல்லும்போதெல்லாம் பொதுமக்கள் விரட்டுவதாகவும்,குப்பை கொட்ட இடமே இல்லை நடவடிக்கை வேண்டும் எனவும் துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர். அக்டோபர் மாதம் வழங்கப்பட்ட ஆடைக்கு கைக்கூலி வழங்கவில்லை, சம்பள பாக்கி உள்ளிட்ட கோரிக்கைகளை மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த இணை இயக்குநர் விஜயகுமாரை சந்தித்து துப்புரவு பணியாளர்கள் தெரிவித்தனர்.