செங்கல்பட்டு: பாதுகாப்பு உபகரணமின்றி குப்பை அள்ளும் தூய்மை பணியாளர்கள்
செங்கல்பட்டு நகராட்சியில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, துாய்மைப்பணியாளர்கள் குப்பை அள்ளும் அவலம் நீடித்து வருகிறது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. குடியிருப்புவாசிகள் மற்றும் வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் குப்பைகள் கொட்டுவதற்கு, நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. குப்பை தொட்டி வைக்கப்படாத இடத்தில் சாலையோரத்தில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். சாலையோரம் கழிவு நீர் வாய்க்கால் அருகே குடியிருப்பு வாசிகள் உள்ளிட்டோர் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. திறந்து வெளியில் கொட்டப்படும் குப்பைகள், சாலை முழுவதும் பரவி கிடப்பதால், நகராட்சி ஊழியர்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு குப்பைகளை அகற்றும் ஊழியர்கள் பலர், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, அவற்றை சேகரித்து அள்ளும் அவல நிலை உள்ளது.
எப்போதாவது ஒருமுறை மட்டுமே பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும், அவை சேதமடைந்து போகும் பட்சத்தில் மீண்டும் வழங்குவது இல்லை என்றும் ஊழியர்கள் கவலையுடன் குறிப்பிட்டனர். கையுறை, முககவசம் போன்ற உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஊழியர்கள் பலர் குப்பைகள் அள்ளுவதால், சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, நகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தேவையான அளவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.