அரியலூர் மாவட்டத்தில் 359 இடங்களில் 16-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்
அரியலூர் மாவட்டத்தில் 16-வது கட்டமாக 359 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 கட்டமாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 6,04,490 நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 3,75,973 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 16-வது கட்டமாக மாபெரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 267 இடங்களிலும், 2 பேரூராட்சிகளுக்குட்பட்ட 7 இடங்களிலும், 2 நகராட்சிகளுக்குட்பட்ட 16 இடங்களிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 69 இடங்களிலும் என மொத்தம் 359 இடங்களில் சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்அடிப்படையில், இன்று (26.12.2021) அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாலாஜாநகரம் ஊராட்சி அலுவலகம், சின்னநாகலூர் மற்றும் ரெட்டிபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் 16-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், தடுப்பூசி முகாம்களில் போதுமான தடுப்பூசி இருப்பில் உள்ளதா என கேட்டறிந்து, முன்களப்பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்த ஊராட்சிகளில் அனைத்து பகுதிகளிலும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என உள்ளாட்சி பிரதிநதிகள் மற்றும் அலுவலர்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
தடுப்பூசி செலுத்த வருகை தந்த பொதுமக்களிடம் 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், தங்கள் வீடுகளில் உள்ளவர்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களிடம் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும், முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இரணண்டாவது தடுப்பூசி கண்டிப்பாக செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் பயன்கள் குறித்து அருகிலுள்ள பொதுமக்களுக்கும் தெரிவித்து 100 சதவீதம் கொரோனா செலுத்தப்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை மாற்றிட அனைத்து பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கீதாராணி, கோட்டாட்சியர் ஏழுமலை, வட்டாட்சியர் ராஜமூர்த்தி, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.