சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அரியலூர் முருகன் கோயில் தேர் திருவிழா
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அரியலூர் முருகன் கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலை அருகே அமைந்துள்ளது 23 அடி உயரமுள்ள முருகன் சிலை கொண்ட கோயில் உள்ளது. இக்கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிகள் உள்ளனஙை.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து வள்ளி,தெய்வானை,முருகன் மற்றும் விநாயகர் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் 9,10,11,13,15 ஆகிய தேதிகளில் சுவாமி வீதி உலாவும்,12ம் தேதி படத்தேரும்,14ம் தேதி திருக்கல்யாணம் வீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று காலை தொடங்கியது.
முன்னதாக முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் விநாயகர் சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொடி,தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் விநாயகர் ஆகிய சுவாமிகள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் முருகனுக்கு அரோகரா,அரோகரா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் அஸ்தினாபுரம் கிராமத்தை சுற்றி வந்தது. அப்போது ஊர் பொதுமக்கள் வீடுகளில் பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.