தயார் நிலையில் 150 ஆக்சிஜன் உருளைகள்: கலெக்டர் த.ரத்னா
அரியலூர் அரசு கலை கல்லூரி கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையத்தில் 140 படுக்கை வசதிகள் தயார் மாவட்ட கலெக்டர் த.ரத்னா தகவல்.
HIGHLIGHTS
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் தொற்றால் பாதிக்கப்படைந்த நபர்களுக்கு உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் அறிகுறிகள் அற்ற கோவிட்-19 தொற்றாலர்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சையுடன் சித்த மருத்துவ முறையின் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் தொழிற் பயிற்சி நிலைய மாணவர் விடுதியில் 23 படுக்கை வசதிகளுடன் சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
மேலும் கூடுதல் தேவைகளுக்காக அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையம் போர்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இம்மையத்தில், ஆண்களுக்கென 90 படுக்கை வசதிகளும், பெண்களுக்கு 50 படுக்கை வசதிகளும் என மொத்தம் 140 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், இம்மையத்தில் சிகிச்சை பெறவுள்ள நோயாளிகளின் வசதிகளுக்காக கூடுதலாக கழிப்பறைகள், குளியலறைகள் மற்றும் மின்சார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இம்மையத்தில் நிலவேம்பு குடிநீர், கபசூர குடிநீர் சூரணம் உள்ளிட்டவைகளுடன் அலோபதி முறையிலான சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளன.
இம்மையத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு கோவிட்-19 தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர். மேலும், மாவட்ட முழுவதும் 6 வட்டாரங்களிலும் வட்டார மருத்துவமனைகளில் தலா 25 என மொத்தம் 150 படுக்கை வசதிகளும், கல்லங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் 10 படுக்கை வசதிகளும், பெரியத்தெரு சமுதாய கூடத்தில் 50 படுக்கை வசதிகளும், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய மாணவர் விடுதியில் 23 படுக்கை வசதிகளும் என மொத்தம் 233 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தீவிர சிகிச்சை பிரிவில் 38 வென்டிலேட்டர் வசதிகளுடன் 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்காக 2.5 கிலோலிட்டர் வசதி கொண்ட மையப்படுத்தப்பட்ட ஆக்சிஜன் விநியோக அமைப்பில் 2.1 கிலோலிட்டர் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 150 ஆக்சிஜன் உருளைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு சிகிச்சைக்கு தேவைப்படும் நபர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கப்படும். மேலும், 3 தனியார் மருத்துவமனைகளில் 70 படுக்கை வசதிகளும், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 12 படுக்கை வசதிகளும், செந்துறை அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகளும், உடையார்பாளையம் அரசு மருத்துவமனையில் 24 என மொத்தம் 336 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அரசு தெரிவித்துள்ளபடி முககவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியினை பின்பற்றுதல் மற்றும் அடிக்கடி சோப்புபோட்டு கைக்கழுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியர் ஏழுமலை, வட்டாட்சியர் ராஜமூர்த்தி, நகராட்சி ஆணையர் (பொ) மனோகரன் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.