திருவண்ணாமலையில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி
திருவண்ணாமலையில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செவிலியர்கள் பலர் பங்கேற்று தாய்ப்பாலின் அவசியம் குறித்த விளக்கங்களை எழுப்பியும் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை உலகத்தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் தாய்ப்பால் அளிப்பதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது. தாய்ப்பாலில் காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
இவ்விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒருகருப் பொருளுடன் இந்நிகழ்வு கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "தாய்ப்பாலூட்டலைச் சாத்தியமாக்குவோம். உழைக்கும் பெண்களுக்கு மாற்றத்தினை ஏற்படுத்துவோம்" என்பதாகும்.
தாய்ப்பாலூட்டலைத் தொடர தாய்மார்களுக்குப் போதுமான நேரமும், ஆதரவும் தேவை. 3 மாதத்திற்குக் கீழாக மகப்பேறு விடுப்பு உள்ள தாய்மார்கள் 3 மாதம் அல்லது அதற்கு மேலாக விடுப்பு உள்ள தாய்மார்களை விட குறைந்த காலத்திற்கு தாய்ப்பாலூட்டியதாக கண்டறியப்பட்டுள்ளது. பணியிடம் போதுமான வசதிகளுடன் தாய்ப்பாலூட்ட உகந்த வேலை செய்யும் இடமாக இருக்க வேண்டும். உலகளவில் 42 நாடுகளில் மட்டும் தான் வேலை செய்யும் இடத்தில் தாய்ப்பாலூட்ட வசதிகள் வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
தற்போது நம் தமிழ்நாட்டை பொருத்த வரை அரசு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான பிரசவகால விடுமுறை என்பது ஒரு வருடமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமிகவும் வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும் தனியார் அலுவலகங்களில் வேலைக்குச் செல்லும் இளம் தாய்மார்களுக்கு குறைந்தபட்சம் ஆறுமாத காலவிடுப்பு கிடைக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கு கட்டாயமாக குறைந்தபட்சம் 6 மாத காலமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 மாத காலம் வரை நிச்சயமாக புட்டிப்பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தக்கூடாது.
எனவே பிறந்த குழந்தைக்கு குறைந்தது 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்பதை ஒவ்வொரு தாயும் உணர்ந்து அதனை செயல்படுத்த வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், கேட்டுக் கொண்டார்.
இதில் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் , மருத்துவர் எ.வ.வே. கம்பன், வட்டாட்சியர் சரளா, பேராசிரியர் சேஷாத்திரி, மருத்துவர் குப்புராஜ், மற்றும் செவிலியர்கள் ,மருத்துவர்கள் ,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உறுதிமொழி ஏற்பு
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மருத்துவக்கல்லூாி டீன் டாக்டர் அரவிந்த் தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், தாய்ப்பாலின் அவசியம் குறித்த விளக்கங்களை எழுப்பியபடியும் சென்றனர்.
பின்னர் புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தின் முன்பு டீன் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவர்கள் ஏற்றனர். நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், குழந்தைகள் பிரிவு தலைவர் பெருமாள், குடியிருப்பு மருத்துவ அலுவலர் அரவிந்தன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.