திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்கள் தூய்மைப் பணி தொடக்கம்
தீபத் திருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்களை தீயணைப்பு வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.
HIGHLIGHTS
தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்களை தீயணைப்பு வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வருகின்ற 17ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி தொடர்ந்து பத்து தினங்கள் காலை இரவு என இருவேளைகளிலும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீபத்திருவிழா 26 ஆம் தேதி திருக்கோவில் கருவரையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அதை தொடர்ந்து அன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆன்மீக பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்
பஞ்சரதங்கள் சுவாமி வீதி உலா வரவுள்ள வாகனங்கள் அனைத்தையும் ஊழியர்கள் பழுது பார்த்தல் , வண்ணம் பூசுதல் ஆகிய பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள ராஜகோபுரம் , அம்மணி அம்மன் கோபுரம் , பே கோபுரம், திருமஞ்சன கோபுரம் உள்ளிட்ட நவகோபுரங்களையும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ராட்சத கிரேன் மூலம் தண்ணீர் பீச்சு அடித்து தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ராட்சத கிரேன் மூலம் கோபுரங்களில் உள்ள சிறு சிறு செடிகளை அகற்றியும் புறா எச்சங்களை தூய்மைப்படுத்தியும். கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணியில் மும்பரமாக ஈடுபட்டுள்ளனர்.
தொடா்ந்து, 2-ஆவது நாளான இன்றும் வெள்ளிக்கிழமை (நவ.10) ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபடுகின்றனா்.