திருவண்ணாமலை: கந்துவட்டி புகார் தொடர்பாக போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கந்துவட்டி புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
அப்பாவி பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைகளுக்காக பணம் கடனாகப் பெற்று கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் கந்து வட்டித் தொழிலில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துப் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காவல் நிலையத்தில் புகார் அளிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்கள் அதிலிருந்து மீண்டு நிம்மதியாக வாழ வழிவகை செய்யப்படும்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இனி எவரும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படாதவாறு அனைத்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.