திருவண்ணாமலை காங்கிரசார் ரயில் மறியல் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 இடங்களில் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ராகுல் காந்தி தகுதி இழப்பு விவகாரத்தில் இம்மாதம் 15-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 இடங்களில் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மற்றும் வடக்கு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருவண்ணாமலையில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி எம்பி விஷ்ணுபிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை பார்த்து ராகுல் காந்தி கேட்ட மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல்., ராகுல்காந்தி மீது போடப்பட்ட பழைய வழக்கை எடுத்து தற்பொழுது இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், எம்பி பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது அவரது இல்லத்தை உடனடியாக காலி செய்ய கூறியது என்பதை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது ஆட்டுவிப்பவர் யாரோ ஒருவர் பாடல் வரிகளைப் போலதிட்டமிட்ட செயல்.
உலகில் 609-வது இடத்தில் இருந்த அதானி 3-வது இடத்துக்கு முன்னேறிய சூட்சமத்துக்கு காரணம் என்ன? அதானிக்கு சொந்தமான விமானத்தில் மோடி வெளிநாட்டுக்கு பயணம் செய்த பின்னணியும், அதானி பெற்ற லாபம் என்ன? வெளிநாடுகளில் அனுபவம் இல்லாத அதானியின் தொழில் முதலீட்டுக்கு மோடியின் நட்பு காரணமா என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
இதன் எதிரொலியாக, தூங்கிக் கிடந்த வழக்கை உயிர்ப்பித்து, 24 நாட்களில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மறுநாளே அவரது எம்.பி பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது. வீட்டையும் காலி செய்ய உத்தரவிடப்பட்டது.
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பாஜக அரசு பாராளுமன்றத்தை முடக்குவதில் மும்மரமாக உள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.பாராளுமன்றத்தில் 19 எதிர்க்கட்சிகள் ஒன்றாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகளால் ஒருநாள் கூட பாராளுமன்றம் முடக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் 19 எதிர்க்கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் உள்ளதாகவும் கூறினார்.
இந்திய நாட்டில் எந்த விதமான முன்னேற்றத்திற்கும் வழி இல்லை, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காகவும் விலைவாசியை குறைப்பதற்காகவும் வழியும் இல்லை என்றும் ஆனால் இந்தியாவை விஸ்வ குருவாக மாற்றிவிட்டதாக மார்தட்டிக் கொள்கிறார்கள் என்றும் விமர்சித்தார். ஆளும் பாஜக அரசு ஜிஎஸ்டியை நம்பி மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக கூறினார்.
மேலும் ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி 2 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. மேலும், ஆட்சியர் அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என கூறினார்.