திருவண்ணாமலை கிரிவலம்: இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த முழு விவரம்
கிரிவலத்திற்கு திருவண்ணாமலைக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
HIGHLIGHTS
திருவண்ணாமலை: பௌர்ணமி நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், இது குறித்து ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுகிறது. சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சித்தரும் தலமாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று, 14 கிலோமீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட மலையை கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம் இந்த நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவர் தமிழகம மட்டும் இன்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்..
இதனை கருத்தில் கொண்டு வேலூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாத பௌர்ணமி, இன்று 28ம் தேதி மாலை 6.30 மணி முதல் நாளை மாலை 4:15 மணி வரை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருவார்கள். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
வேலூா் - திருவண்ணாமலை முன்பதிவற்ற சிறப்பு ரயிலானது (06127) இன்று வேலூரில் இரவு 9.50 மணிக்குப் புறப்பட்டு கனியம்பாடி, கன்னமங்கலம், ஆரணி, போளூா், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடையும்.
மறுமாா்க்கமாக, திருவண்ணாமலை - வேலூா் முன்பதிவற்ற சிறப்பு ரயிலானது (06128) 29 ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழியாக வேலூருக்கு அதிகாலை 5.35 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்கள் சென்னை கடற்கரை சாலை வரை நீட்டிக்கப்பட்டு சென்னை கடற்கரை சாலை - வேலூா் - சென்னை கடற்கரை (06033, 06034) ரயில்களாக இயக்கப்படும்.
விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (06129) வெள்ளிக்கிழமை (செப்.29) விழுப்புரத்திலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூா், திருக்கோயிலூா், ஆதிச்சநல்லூா், அண்டபள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு முற்பகல் 11 மணிக்கு வந்தடையும்.
மறுமாா்க்கமாக, திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (06130) வெள்ளிக்கிழமை (செப்.29) ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு தண்டரை, அண்டபள்ளம், ஆதிச்சநல்லூா், திருக்கோயிலூா், அயந்தூா், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் வழியாக விழுப்புரத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்கள் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டு மயிலாடுதுறை - விழுப்புரம் - மயிலாடுதுறை ( 06690, 06691) ரயில்களாக இயக்கப்படும்.
வண்டி எண் 06131 விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் விழுப்புரத்திலிருந்து வியாழக்கிழமை (செப்.28) இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 11 மணிக்குச் சென்றடையும். எதிா்வழித்தடத்தில் வண்டி எண் 06132 திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில், திருவண்ணாமலையிலிருந்து வெள்ளிக்கிழமை (செப்.29) அதிகாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும். இந்த இரு ரயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்கள் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டு தாம்பரம் - விழுப்புரம் - தாம்பரம் (06028, 06027) ரயில்களாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.