அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிறப்பு தரிசனம் ரத்து
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிறப்பு அமர்வு தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிறப்பு அமர்வு தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கிய ஆன்மீக கோவில்களில் ஒன்றாகும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரிவலம் வருவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இதுவரை விவிஐபி, விஐபி அமர்வு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சிறப்பு அமர்வு தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் வருவதாலும், பக்தர்களின் நலன் கருதியும், விரைவாக தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் அமர்வு தரிசனம் இன்று முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிதுள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதால் திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
புது வருட பிறப்பன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவிலுக்கு உள்ளே செல்ல வரிசை முறையாக செய்யாததால் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு கோவிலுக்கு உள்ளே செல்ல முற்பட்டபோது பக்தர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
மேலும் கோயில் நிர்வாகம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முறையாக வழிவகை செய்யவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
மேலும் பக்தர்கள் கூறுகையில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு வரும் விஐபிகளை அழைத்துச் செல்வதற்கு தான் நேரம் அதிகமாக உள்ளது , சாதாரண பக்தர்களை வரிசையில் அனுப்ப எந்தவிதமான ஏற்பாடும் செய்வதில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அமர்வு தரிசனம் மற்றும் விஐபி அமர்வு தரிசனம் கிடையாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் இந்த உத்தரவினை கோவில் ஊழியர்கள் எவ்வாறு கடைபிடிக்கப் போகிறார்கள் என்பதையெல்லாம் வரும் நாட்களில் தெரியவரும்.