துப்பாக்கி சுடும் போட்டி: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதலிடம்
துப்பாக்கி சுடும் போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதலிடம் பிடித்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 2 நாட்கள் வடக்கு மண்டல காவல்துறையினர் அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்றது.
இதில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் முதலிடத்தையும், இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடத்தையும், பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் 2-ம் இடத்தையும் வென்றார்.
மேலும் வந்தவாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்தி ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் 3-ம் இடத்தையும் வென்றார். மேலும் பெண் போலீசாருக்கென நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட திருவண்ணாமலை மாவட்ட பெண் போலீசார் 5 பதக்கங்களை வென்றனர்.
ஓய்வு பெற்ற பால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டம்:
கண்ணமங்கலத்தில் ஓய்வு பெற்ற பால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டம் நடந்தது.
பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் கண்ணமங்கலத்தில்அதன் தலைவர் (பொறுப்பு) களம்பூர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆவின் பால் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் கருணை ஓய்வூதியம், அரை லிட்டர் பால் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் மயில்வாகனன், குமரவேல், சுப்ரமணி, புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நடுக்குப்பம் முருகன் நன்றி கூறினார்
சிறுமியின் தொண்டையில் சிக்கிய காந்தம் அறுவை சிகிச்சை இன்றி அகற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா மொத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ், கூலித் தொழிலாளி. இவரது 3 வயதுடைய பெண் குழந்தை தனுஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விளையாட்டு பொம்மையில் இருந்த ஸ்டார் வடிவிலான காந்தத்தை சிறுமி விழுங்கிவிட்டார்.
இதனை பார்த்த பெற்றோர் பதறியவாறு தனுஸ்ரீயை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தனுஸ்ரீயை பரிசோதித்த டாக்டர்கள் மூச்சுக் குழாய் வழியாக மயக்க மருந்து செலுத்தி உணவு குழாய் வழியாக டியூப் செலுத்தி தொண்டையில் சிக்கி இருந்த காந்தத்தை அறுவை சிகிச்சை இன்றி வெளியே எடுத்தனர். சிறுமி தனஸ்ரீ நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சிறுமியின் உணவுக் குழாயில் சிக்கி இருந்த காந்தத்தை அறுவை சிகிச்சை இன்றி வெற்றிகரமாக அகற்றிய மருத்துவக் குழுவினர்களான காது, மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணர் அன்பழகன், டாக்டர்கள் கமலக்கண்ணன், அரவிந்தன், மயக்கவியல் நிபுணர் பாலமுருகன், துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர், டாக்டர் மணிகண்டன் மற்றும் ஆகியோரை டீன் அரவிந்த் பாராட்டினார்.
கோவில் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஆரணியில் கோவில் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. இந்து முன்னணியினரும் திரண்டதால் பணிகள் தீவிரமாக நடந்தது. ஆரணி அண்ணா சிலை அருகில் காந்தி ரோட்டில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலுக்கு முன்புறம் தனி நபர்கள் பெயிண்ட் கடை, பெட்டிக்கடை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டது. பலமுறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்ற சென்றபோது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தரப்பில் நாங்கள் மேல் முறையீடு செய்து இருக்கிறோம் எனக்கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதனிடையே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகாமையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் காலை ஆரணி தாசில்தார் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர் நித்தியா, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், கண்ணதாசன் மற்றும் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தொடங்கினர்.
இந்து முன்னணியினரும் கோவில் அருகாமையில் திரண்டு வந்தனர். அவர்களும் கோவில் நிர்வாகிகளோடு சேர்ந்து ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வலியுறுத்தினர். அதன்பின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.