திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தேய்பிறை சனி மஹா பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது.
HIGHLIGHTS
சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது. அதில் சோமவார பிரதோஷம் எனப்படும் திங்கட் கிழமையில் வரும் பிரதோஷம், சனி பிரதோஷம் எனப்படும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் பிரசித்தி பெற்றது. இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடை பெற்று வருகின்றன.
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்.
திருவண்ணாமலையில், புகழ்பெற்ற அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், ஐப்பசி சனி மஹா மாத பிரதோஷ விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு ஸ்ரீ நந்தீகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.அதை தொடர்ந்து, ஐந்தாம் பிராகரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இந்தப் பிரதோஷ காலத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர் .
திருவண்ணாமலை உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் நடராஜர் சன்னதியில் மழைநீர் கொட்டியதுபோன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவியது. இந்த கோவிலின் 2-ம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் போது நடராஜர் சன்னதியில் மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டுவது போன்ற வீடியோ சமூக வலை தளத்தில் பரவியது.
மழை நீர் வடிகால் வசதியுடன் இக்கோவில் கட்டமைக்கப்பட்டு இருக்கக் கூடிய நிலையில் கோவிலுக்குள் உள்ள நடராஜர் சிலை இருக்கக் கூடிய பகுதியில் மழை நீர் எப்படி வந்தது என்று பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்து உள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவில் வளாகத்தில் மழை நீர் வடிகால் கட்டமைப்புகள் உள்ளது. மழை நீர் வடிகால் பகுதியில் அடைப்பு ஏற்பட்டதால் கோவிலின் மேல் பகுதியில் தண்ணீர் தேங்கி நடராஜர் சன்னதியில் இறங்கியுள்ளது. இந்த தகவலறிந்ததும் நேரடியாக பார்வையிட்டு சில நிமிடங்களில் வடிகால் அடைப்பு சரி செய்யப்பட்டு விட்டது.
நடராஜர் சன்னதியில் மழை நீர் கொட்டிய காட்சியை அந்த சமயத்தில் அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து கோவிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலை தளத்தில் பதிவேற்றம் செய்து உள்ளனர்/
இவ்வாறு இணை ஆணையர் அசோக்குமார் கூறி உள்ளார்.