/* */

திருவண்ணாமலையில் நள்ளிரவில் போலீசார் சோதனை: 22 டூவீலர்கள் சிக்கின

திருவண்ணாமலையில் நள்ளிரவில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 6 பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் நள்ளிரவில் போலீசார் சோதனை: 22 டூவீலர்கள் சிக்கின
X

திருவண்ணாமலையில் நள்ளிரவில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் ரவுடிகள் மற்றும் சந்தேகப்படும் நபர்களை பிடிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், நேற்று நள்ளிரவில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள கோபுரத் தெரு பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜகாளீஸ்வரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து பே கோபுரத் தெருவில் அணி வகுத்து சென்றனர். பின்னர் போலீசார் அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சந்தேகப்படும் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். பேகோபுரத் தெரு வழியாக சென்ற கார், மோட்டார் சைக்கிள், வெளிமாநில வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர்.

இதில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட முயன்ற பே கோபுரம் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 23), அருண்பாண்டியன் (25), பாலாஜி (45), அய்யப்பன் (31), காளிமுத்து (26) மற்றும் மதுவிற்ற கிருஷ்ணமூர்த்தி (40) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். கத்தி, இரும்பு ஆயுதங்கள், மதுபாட்டில்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 April 2022 1:16 AM GMT

Related News