போளூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு
தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த மனுவை போளூர் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலெக்டரிடம் அளித்தார்
HIGHLIGHTS
தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் நிறைவேற்றப்படாத 10 பிரச்சனைகளை குறிப்பிட்டு அதனை மாவட்ட கலெக்டரிடம் கடிதமாக கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
அதை தொடர்ந்து போளூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போளூர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய கோரிக்கைகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
போளூர் நகரில் அமைக்கப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலம் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்.
கரைப்பூண்டி ஊராட்சியில் உள்ள தரணி சக்கர ஆலையை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை வட்டியுடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் -சித்தூர் சாலையில் வசூரில் இருந்து அத்திமூர் செல்லும் வழியில் உள்ள அரசு மருத்துவமனை வரை புதிய பைபாஸ் சாலை அமைக்க வேண்டும்.
போளூர் சட்டமன்ற தொகுதியில் புதிய மகளிர் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும். படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்காக அரசு சார்பில் சிப்காட் அல்லது சிட்கோ தொழிற்பேட்டை அமைத்து தரப்பட வேண்டும்.
போளூரில் செயல்பட்டு வரும் மருத்துவமனை போதிய வசதியின்மை காரணமாக புறநோயாளிகள் பிரிவு மருத்துவமனை இடத்தில் புதிய கட்டிடங்கள் அமைத்து மக்களின் பயன்பாடுக்காக கொண்டுவர வேண்டும். பெரணமல்லூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து பெரியகொழப்பலூரை தலைமை இடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் தொடங்கப்பட வேண்டும்.
சேத்துப்பட்டு- ஆரணி சாலையில் இருந்து கண்ணனூர் செல்லும் சாலையை அகலப்படுத்தி பாலம் மற்றும் தார் சாலை அமைத்து தரப்பட வேண்டும். இந்திரவனம், ஆவணியாபுரம், மட்டபிறையூர், ஆர்.குன்னத்தூர், மன்சூராபாத் ஆகிய ஊராட்சிகளில் அரசின் சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய திருமண மண்டபங்கள் அமைத்து தரப்பட வேண்டும்.
சேத்துப்பட்டில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போதிய இட வசதி இல்லாத காரணத்தால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாது நிலையில் பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக அரசு தாலுகா மருத்துவமனைக்கு போதிய இடவசதி மற்றும் கட்டிடங்கள் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.