திருவண்ணாமலை நவிரம் பூங்கா அகற்றம்: பொதுமக்கள் ஏமாற்றம்
திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயில் அருகில் நவிரம் பூங்கா, திடீரென அகற்றப்பட்டுள்ளது, மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயில் அருகில், போளூர் சாலையில் நவிரம் பூங்கா அமைக்கப்பட்டு இருந்தது.. இந்த பூங்கா, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களுடன் பொதுமக்கள் பொழுது போக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இப்பூங்காவில் தினமும் காலை மற்றும் மாலையில் பலர் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
கடந்த 26.12.18. ஆம் தேதி பூங்காவை, அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார். தொண்டை மண்டலத்தின் முக்கிய மலையாகவும், சங்க இலக்கியத்திலும் ஆன்மிகத்திலும் போற்றப்படும் நவிரமலை இருந்து வருகிறது. அந்த மலையின் பெயரே இந்த பூங்காவிற்கு வைக்கப்பட்டது.
இப்படி, அனைவராலும் கவரப்பட்ட நவிரம் பூங்கா, கொரோனா காலத்தில் அரசு உத்தரவின்படி மூடப்பட்டது. மக்கள் மனமகிழ்வுடன் கொண்டாடிய இந்த இடம், சிலர் கண்ணை உறுத்த தொடங்கியது. கிருஷ்ணமூர்த்தி என்ற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, இந்த பூங்காவிற்கு பக்கத்தில் உள்ள சுடுகாட்டில் தன்னுடைய முன்னோர்கள் புதைக்கப்பட்டு இருப்பதால், தான் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும்; அதற்கு பூங்கா தடையாக இருக்கிறது என்று வழக்கு தொடர்ந்தார்.
பூங்கா அமைக்கப்படுவதற்கு முன்பு, அந்த இடத்தில் குளம் ஒன்று இருந்துள்ளது. அந்த குளத்தை மூடிவிட்டு அங்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீர் நிலை ஆக்கிரமிப்பான குளம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை நகராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து நவிரம் பூங்காவில் உள்ள கட்டிடங்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். இது, அப்பகுதியினருக்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.