/* */

திருவண்ணாமலை அய்யங்குளத்தில் நந்தி சிலை: அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை அய்யங்குளத்தில் நந்தி சிலை அமைத்து அழகுப்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அய்யங்குளத்தில் நந்தி சிலை: அமைச்சர் தகவல்
X

80 ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யன்குளம் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அய்யங்குளத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது தெப்பல் திருவிழா நடைபெறும். மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியும் இங்கே நடைபெறுவது வழக்கம்.

இந்த குளத்தின் ஆழம் 32 அடி ஆகும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் 16 அடியாக தூர்ந்து போய் உள்ளது. தற்போது இந்த குளம் திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பின் சார்பில் தூர்வாரப்பட்டு வருகிறது.

இந்தத் தூய்மை அருணை அமைப்பின் அமைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளார். இவர் இன்று அய்யங்குளத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை சிறப்பாக செய்திடவும் குலத்தை அழகுபடுத்தவும் அமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் தூய்மை உறுதிமொழியை அமைச்சர் தலைமையில் அனைவரும் எடுத்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலு பேசியதாவது

தூய்மை அருணை என்ற அமைப்பு கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆயிரம் தூய்மை பணியாளர்களை கொண்டு கடந்த 7 ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மை பணியை செய்து வருகிறோம். நகரை பசுமையாக்க தேனிமலை பகுதியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல நகரின் அனைத்து வார்டுகளிலும் மசூதி, சர்ச் போன்ற இடங்களிலும் மதபாகுபாடின்றி தூய்மை பணிகளை செய்து வருகிறோம்.

தூய்மை அருணை அமைப்பானது அரசியல் மதங்களுக்கு அப்பாற்பட்டு சமூக பணியாற்றி வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியை தூய்மை அருணை அமைப்பினர் தூய்மை பணி செய்ததால் இந்தியாவிலேயே தூய்மையான அரசு மருத்துவக் கல்லூரி என்ற சான்றை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளோம்.

கொரோனா காலத்திலும் கிரிவலப்பாதையில் உள்ள 500 சாதுக்களுக்கு தினமும் உணவளிக்கப்பட்டது. இதேபோல் காவல்துறை, அரசு அலுவலர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தினமும் உணவுகள் வழங்கப்பட்டது. நலிவடைந்த குடும்பங்களுக்கு உணவு பொருட்களையும் வழங்கினோம். 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அய்யங்குளம் நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த குளம்.

சிறப்பு வாய்ந்த இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போன நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது 4 பேர் இந்த குளத்தின் சேற்றில் சிக்கி இறந்தனர். இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் ஆன்மிக பக்தர்களும் அப்போது என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த குளத்தை சீரமைப்பேன் என்று உறுதியளித்தேன் அதன்படி தற்போது திமுக ஆட்சியில் தூர்வாரும் பணியை செய்து வருகிறோம். இந்த குளத்தை எப்படி சீரமைக்க வேண்டும் என்று ஆன்மிக பக்தர்கள் விரும்புகிறார்களோ அதை எனக்கு நேரடியாகவோ கடிதம் மூலமாகவோ தெரிவித்தால் அதனை செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். வயதானவர்கள் இந்த குளத்தில் இறங்குவதற்கு வசதியாக கைப்பிடிகளுடன் படிக்கட்டுகளை நான்கு புறமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

மேலும் இந்த குளத்தில் நான்கு பகுதிகளில் பில்டர் அமைத்து கசடு சேராமல் குளம் தூய்மையாக இருக்கும்படி பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. எனக்கு ஆன்மிக பக்தர்களிடம் இருந்து வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பப்பட்டது அதில் அய்யங்குளத்தில் நந்தி சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அய்யங்குளம் மத்தியில் உள்ள மண்டபம் அழகுப்படுத்தப்பட்டு அதன் நடுவில் அண்ணாமலையார் மலையை நோக்கிய வண்ணம் நந்தி சிலை அமைக்கப்படும். எனக் கூறினார்

பின்னர் செய்தியாளர்கள் கிரிவல பாதையில் அசைவ உணவகங்கள் அகற்ற வேண்டும் என திருவண்ணாமலைக்கு வந்த கவர்னர் ரவி கூறியது குறித்து அமைத்தரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு அமைச்சர் உணவு என்பது அவரவர் விருப்பமும் உரிமையும் ஆகும். கிரிவலம் வரும் பக்தர்கள் அசைவ உணவையும் உணவகங்களையும் தவிர்க்கலாம், ஆனால் இதற்கு அரசு தடை போட முடியாது என்றார்.

இந்த ஊரில் அதிகமான ஆன்மீக மக்கள் வருகிறார்கள், அவர்கள் அசைவ உணவை விரும்ப மாட்டார்கள் என உணவு கடைக்காரர்களே இது தேவையில்லை என உணர்ந்து அவர்களாகவே கடையை எடுக்கலாமே தவிர, அரசாங்கம் அதிகாரத்தை பயன்படுத்தி நேரடியாக போய் இந்த உணவை சமைக்க கூடாது என சொல்வது பொருத்தமாக இருக்காது. உணவு சாப்பிடுவது என்பது தனி மனித உரிமையாகும். இது ஆன்மீக நகரம் என்பதால் கடைக்காரர்களே அசைவ உணவகங்களை எடுத்தால் அவர்களுக்கு எனது நன்றி.

மேலும் பௌர்ணமி தினத்தில் அசைவ கடைகளை யாரும் வைப்பது கிடையாது. இதை தான் சாப்பிட வேண்டும் இந்த கடைகள் தான் இருக்க வேண்டும் என நான் எப்படி கூற முடியும் இது விமர்சனத்தை ஏற்படுத்தும் இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஆய்வின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மாநில மருத்துவர் அணி துணை தலைவரும் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஸ்ரீதரன், ப.கார்த்திவேல்மாறன், பிரியா விஜயரங்கன், அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், இணை ஆணையர் ஜோதி, வியாபாரி சங்க நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 14 Aug 2023 1:43 AM GMT

Related News