நாளை மகா தீபம்: திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்
நாளை பரணி தீபம் மற்றும் மகாதீபம் நடைபெற உள்ளதால் திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிய தொடங்கினர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா அருணாசலேஸ்வரா் கோயிலில் நவம்பா் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வருகின்றனா்.
21 ஆம் தேதி வெள்ளி பெரிய ரிஷப வாகனமும், 22 ஆம் தேதி 63 நாயன்மார்கள் வீதி உலா மற்றும் வெள்ளி ரதம், 23ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டமும் நேற்று பிச்சாண்டவர் உற்சவமும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் நாளை அதிகாலை பரணி தீபமும் நாளை மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளதால் திருவண்ணாமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் என குவிய தொடங்கியுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு:
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருவண்ணாமலை நகர் முழுவதும் குறிப்பாக மாடவீதி மற்றும் கிரிவலப் பாதையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பெரிய கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகர் முழுவதும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
கூடுதலாக 90 போலீசார், 20 தனிப்பிரிவு போலீசார் அனுப்பி வைப்பு:
கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்புப்பணியில் ஏற்கனவே வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து எஸ்பி மணிவண்ணன் தலைமையில் ஏற்கனவே ஏஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் மற்றும் 550 போலீசார் திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் இருந்து நேற்று காலை 90 போலீசார் கூடுதலாக திருவண்ணாமலை தீப விழா பாதுகாப்புப்பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுடன் 2 டிஎஸ்பிக்களும் சென்றுள்ளனர். அதோடு 20 தனிப்பிரிவு ஏட்டுகளும் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர காவல்துறையின் இதர பிரிவுகளை சேர்ந்தவர்களும் திருவண்ணாமலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை பைபாஸ் சாலைகள், தற்காலிக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் போலீசார் காக்கி சீருடை அணியாமல் பக்தர்களைப் போலும் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்
கிரிவலப் பாதையில் 244 அன்னதான கூடங்களில் 23 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு அன்னதானம்:
கிரிவலப் பாதையில் 244 அன்னதான கூடங்களில் 23 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
திருவண்ணாமலை தீப விழாவை ஒட்டி, 78 அன்னதான கூடங்களில் 11.85 லட்சம் பேருக்கு அன்னதானமாக சிறுதானிய உணவும் வழங்கப்பட உள்ளது.