திருவண்ணாமலை மாட வீதியில் தரைவழி மின் விநியோகம் துவக்கம்
திருவண்ணாமலை மாட வீதியில் தரைவழி மின் விநியோகம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் பள்ளம் தோண்ட கூடாது என மின்சார வாரியம் எச்சரித்துள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. முதற்கட்டமாக பே கோபுரம் சந்திப்பு பகுதியில் உள்ள பூத நாராயணன் கோவில் வரை சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இப்பணியானது இன்னும் சில நாட்களில் முடி உர உள்ளது.
மேலும் ரூபாய் 3 கோடியே 17 லட்சம் செலவில் புதிதாக குடிநீர் பைப்புகள் புதைக்கும் பணியும் ரூபாய் 4 கோடியில் புதைவட கேபிள்கள் புதைக்கும் பணியும் நிறைவடைந்தன.
பெருநகரங்களில் மட்டுமே இருந்த புதை மின் வடம் (தரைவழி மின்சாரம் திட்டம்) , முதன் முறையாக திருவண்ணாமலையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா முடிந்ததும் அடுத்த ஆண்டு திருவுடல் தெரு, தேரடி தெரு ஆகியவற்றில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது . இந்த தெருகளிலும் பே.கோபுரம் பெரிய தெருவை அடுத்து புதை மின் வடம் அமைக்கப்பட உள்ளது.
புதை மின் வடம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் பே கோபுரத் தெரு , பெரிய தெருகளில் இருந்த மின் கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இதைத்தொடர்ந்து தரைக்கு அடியில் பாதுகாப்பான முறையில் தடையில்லா மின் வினியோகம் வழங்கும் நான்கு மின் வலை சுற்று அமைப்பு மூலம் மின்சாரம் செலுத்தப்பட்டுள்ளது.
தரைக்கு அடியில் மின்விநியோகம் வழங்கும் பணியை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் பழனிராஜ் துவக்கி வைத்தார். இதில் செயற் பொறியாளர்கள் ராமு ,வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதை மின் வடம் திட்டம் துவங்கப்பட்டுள்ளதால் மாடவீதியில் சுற்றிலும் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கேபிள்களில் மின்சாரம் தொடர்ந்து இருக்கும். எனவே மாட வீதிகளில் மற்ற துறைகள் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் ஏதாவது இருப்பின் மின்வாரியத்தின் ஆலோசனைகளை பெற்று மட்டுமே பணிகளை செய்யுமாறு பொதுமக்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் குழாய் விநியோகத்துறை, அனைத்து துறைகளையும், மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.