கிரிவல பாதையில் கருணாநிதி சிலை வைத்ததற்கு இந்து முன்னணி எதிர்ப்பு
Karunanidhi Statue - திருவண்ணாமலை கிரிவல பாதையில் கருணாநிதி சிலை வைத்ததற்கு இந்து முன்னணி மாநில தலைவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
HIGHLIGHTS
Karunanidhi Statue - தமிழகத்தில் இந்துக்களின் உரிமைகளை மீட்க இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் திருவண்ணாமலைக்கு வந்தார். தொடர்ந்து அவரது தலைமையில் பிரசார பொதுக்கூட்டம் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கி பேசினார். இதில் மாநில பொதுச்செயலாளர் நா.முருகானந்தம், மாநில இணை அமைப்பாளர் குருகுலம் ராஜேஷ், கோட்டத் தலைவர் மகேஷ், கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் இரா.அருண்குமார், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் மடங்கள் அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனை அகற்றி பக்தர்களின் பயன்பாட்டுக்கு இந்து சமய அறநிலையத் துறை கொண்டு வர வேண்டும். திருவண்ணாமலை அருகே மருத்துவாம்பாடியில் உள்ள பொது பாதையை கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இப்பாதையை தடையின்றி மக்கள் பயன்படுத்த வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் நடைபெற்ற கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டு உள்ளது. அப்பாவி பொதுமக்கள், வேடிக்கை பார்க்க சென்றவர்கள் சிக்கி உள்ளனர். உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. மாணவி உயிரிழந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும்.
அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானையை உடனடியாக கொண்டு வரவில்லை என்றால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும். அருணாசலேஸ்வரர் கோவிலை தூய்மையாக வைக்க வேண்டும். கோவில் மற்றும் கிரிவல பாதையில் பக்தர்களுக்கு சுகாதாரமான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இதற்காக அரசாங்கம் தனியாக நிதியை ஒதுக்க தேவையில்லை. பக்தர்கள் கொடுக்கும் நிதியில் இருந்து செய்யலாம்.
கிரிவலப்பாதையில் கருணாநிதியின் சிலையை வைக்க வேண்டிய தேவையில்லை. ஆன்மிக நகரில் கருணாநிதியின் சிலை வைத்துள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. திருவண்ணாமலை நகரை புனித நகராக அறிவிக்க வேண்டும். மாமிச கடைகளை அகற்ற வேண்டும் என்றார்.முன்னதாக பிரசார கூட்ட பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2