தீபத் திருவிழா: குதிரை, மாட்டுச் சந்தைகளில் விறுவிறுப்பான விற்பனை
திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவையொட்டி தொடங்கப்பட்டுள்ள குதிரை, மாட்டுச் சந்தைகளில் விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது
HIGHLIGHTS
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் நடந்த குதிரை, மாட்டு சந்தையில் ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர். இதனால் சந்தை களைகட்டியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவையொட்டி பாரம்பரியமாக பல ஆண்டுகளாக குதிரை சந்தை, மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான குதிரை, மாட்டு சந்தை நேற்றுதொடங்கியது.
திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரி அருகே மாட்டுச் சந்தையும், மலையடிவாரத்தில் குதிரைச் சந்தையும் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் மாடுகள், கன்றுகள், குதிரைகள் அதிளவில் விற்பனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.
குதிரை சந்தைக்காக திருவண்ணாமலை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காட்டுவாடி, நாட்டு குதிரை, குவேத் உள்பட ஏராளமான குதிரை வகைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன.
அதேபோல் மாட்டு சந்தையிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. மேலும் இந்த சந்தைக்கு அருகில் மாடு மற்றும் குதிரைக்கு கட்டுவதற்கு தேவையான மணிகள், கயிறுகள் விற்பனை செய்வதற்காக ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கால்நடை மருத்துவ முகாமும் நடைபெற்றது.
ரூபாய்.3 ஆயிரம் முதல் ரூபாய்.50 ஆயிரம் வரை விலை கொண்ட மாடுகளும், பல்வேறு விலைகளில் குதிரைகளும் விற்பனைக்கு வந்திருந்தன. இந்தச் சந்தை தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.