அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை: கோயில் நிர்வாகம் தகவல்
அன்னாபிஷேக விழாவையொட்டி நாளை 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான, புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக உள்ளது. நினைத்தாலே முக்தியை தரக் கூடிய முக்தித் தலம் என்பதாலும், சிவனே மலையாக அமர்ந்திருப்பதாக கருதப்படுவதால் மலையை வலம் வந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி, அனைத்து விதமான செல்வ வளங்களும் கிடைக்கும் என்பதாலும் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
மாதந்தோறும் வரும் பெளர்ணமியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் வரும் நிலையில், அக்டோபர் மாதம் வரும் ஐப்பசி பெளர்ணமி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். ஐப்பசி பெளர்ணமி அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். திருவண்ணாமலையிலும் ஐப்பசி பெளர்ணமியான அக்டோபர் 28ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.
வெண்ணெய் கலந்த அன்னத்தால் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் நடத்தப்படவுள்ளது.
அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் சமயத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதாவது பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான மூன்று மணி நேரம் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அன்று நாள் முழுவதும் பெளர்ணமி திதி இருப்பதால் கிரிவலம் செல்ல முடியுமே தவிர, மாலை 6 மணிக்கு பிறகே அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் வழக்கம் போல் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதே போல் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வார விடுமுறை நாள் என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படும் என்பதால் திருவண்ணாமலை நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 3ம் பிரகாரத்தில் தரிசன வரிசையை அனுமதிப்பதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறைய வாய்ப்புள்ளதாகக் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.