அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.98 லட்சம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ. 98 லட்சம் செலுத்தியிருந்தனர்.
HIGHLIGHTS
சிவனின் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா், வெளிநாடுகளைச் சோந்த பக்தா்கள் வந்து, செல்கின்றனா்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கடந்த 28 ஆம் தேதி மாலையில் தொடங்கி 29 ஆம் தேதி மாலையில் நிறைவடைந்தது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு, வங்கியில் செலுத்துவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், பக்தா்கள், தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டன.
இதில், ரூ.98 லட்சத்து 59 ஆயிரத்து 822 ரொக்கம், 135 கிராம் தங்கம், 1.75 கிலோ வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி ஆகியவை கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது
மேலும் நேற்றுடன் 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளில். மாற்ற கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ( தற்போது கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது ) நேற்று அண்ணாமலையார் கோயில் உண்டியல் எண்ணும் பணியின் போது 5 2000 நோட்டுகள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.