அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.24 கோடி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில்உண்டியல் காணிக்கையாக ரூ.2.24 கோடி பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் ரூ.2.24 கோடி ரொக்கம், 188 கிராம் தங்கம், 1,240 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தி உள்ளனா்
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் சிவனின் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தா்கள் வந்து, செல்கின்றனா்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு, வங்கியில் செலுத்துவது வழக்கம்.
ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி காலையில் தொடங்கி 29 ஆம் தேதி அதிகாலையில் நிறைவடைந்தது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
கோயில் இணை ஆணையா் ஜோதி தலைமையில் அறங்காவலா்கள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில், ரூ.2 கோடியே 24 லட்சத்து 41 ஆயிரத்து 224 ரொக்கம், 188 கிராம் தங்கம், 1,240 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டன. ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி ஆகியவை கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.