திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு; 54 பேர் ஆப்செண்ட்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 234 பேர் நீட் தேர்வு எழுதினா். 54 பேர் தேர்வு எழுத வரவில்லை.
HIGHLIGHTS
மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) ஒரு தன்னாட்சி மற்றும் தன்னிறைவான முதன்மையான தேர்வு அமைப்பாக நிறுவப்பட்டுள்ளது. முதன்மையான மருத்துவ நிறுவனங்களில் சேருவதற்கான தேர்வாளர்களின் திறனை மதிப்பிடுவதற்காக திறமையான, வெளிப்படையான மற்றும் சர்வதேச தரநிலையான தேர்வை நடத்துவதற்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நீட்-2023 தேசிய தேர்வு முகமையால் நேற்று 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடப்பட்டது.
மொத்தம் 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடைபெற்றது. இது இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும், இளநிலை (எம்.பி.பி.எஸ்) மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாகும்.
நீட் தேர்வு எழுத திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 288 பேர் விண்ணப்பித்திருந்தனா். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை சாஷம்மாள் வித்யா மந்திர் பள்ளி, எஸ்.கே.பி. வனிதா இன்டர்நேஷனல் பள்ளி, எஸ்.கே.வி. இன்டர்நேஷனல் பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, ஆரணி அத்திமலைப்பட்டு துலிப் இன்டர்நேஷனல் பள்ளி, கண்ணம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி, செய்யாறு விருட்சம் இன்டர்நேஷனல் பள்ளி, ஆல் இன்டியா மார்டன் பள்ளி என 8 மையங்களில் 3 ஆயிரத்து 288 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும் வகையில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
மேலும் திருவண்ணாமலையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி 'நீட்' தேர்வு விடைத்தாள் ஒட்டுமொத்த சேகரிப்பு மையமாக அமைக்கப்பட்டு இருந்தது.
தேர்வு எழுதும் மையங்களுக்கு காலை 11 மணியில் இருந்து மாணவ, மாணவிகள் வரத்தொடங்கினர். பின்னர் தேர்வு மைய நுழைவு வாயிலில் மாணவ, மாணவிகளை சோதனை செய்து, 'நீட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மட்டுமே தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு நுழைவு வாயிலில் புதிய முக கவசம் வழங்கப்பட்டது. பேனா, செல்போன், கை கடிகாரம், கம்மல் போன்றவற்றை அணிந்து செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. பின்னல் சடையுடன் வந்த மாணவிகளை சடை பின்னலை கலைத்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்
தேர்வர்கள் மதியம் 1.30 மணி வரை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் வந்தவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது. 3,234 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 54 பேர் தேர்வு எழுத வரவில்லை.