வாக்குச்சாவடி மையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது; கிராம மக்கள் சாலை மறியல்
வாக்குச்சாவடி மையத்தை பழைய இடத்திலேயே அமைக்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த எள்ளுபாறை கிராம பொதுமக்கள் வாக்குச்சாவடி மையத்தை பழைய இடத்திலேயே அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கலசப்பாக்கத்தை அடுத்த சேங்கபுத்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட எள்ளுபாறை கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் 600 -க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் ஆதிதிராவிடா் 429 வாக்காளா்கள் உள்ளனா். இந்த வாக்காளா்களுக்கு சேங்கபுத்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 109 எண் கொண்ட வாக்குச்சாவடி மையம் அமைத்து வாக்களித்து வந்தனா்.
இந்த நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு எள்ளுபாறை வாக்காளா்களுக்கு திடீரென சிறுவள்ளூா் ஊராட்சியைச் சேர்ந்த அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இவா்கள் சுமாா் ஒரு கி.மீ. தொலைவு நடந்து சென்று வாக்களிக்கும் நிலை உள்ளது. இதனால், எள்ளுபாறை கிராம பொதுமக்கள் வாக்குச்சாவடி மையத்தை சேங்கபுத்தேரி கிராமத்தில் உள்ள பழைய இடத்திலேயே இருக்கவேண்டும் எனக் கூறி போளூா்-மேல்சோழங்குப்பம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த சாலை மறியல் குறித்து எள்ளுப்பாறை கிராம மக்கள் தெரிவிக்கையில்,
எங்கள் ஊருக்கும் அய்யம்பாளையம் ஊருக்கும் ஏற்கனவே பிரச்சனைகள் நிறைய உள்ளது. அதனால் நாங்கள் அங்கு சென்று வாக்களிக்க மாட்டோம். எங்களுக்கு தனி பூத் அமைத்துக் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இதற்கு முன்பு இருந்த சேங்கபுத்தேரி ஊராட்சியில் எங்களுக்கு பூத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும், நாங்கள் இது குறித்து கடந்த 23 ஆம் தேதி அன்று தாலுகா அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளோம்.
ஆனால் இறுதி நேரத்தில் நாங்கள் எப்படி பூத் தனியாக அமைத்துக் கொடுப்பது என்று அதிகாரிகள் அதனை விட்டு விட்டனர்.
அதனால் எள்ளுப்பாறை கிராம மக்கள் நாங்கள் அய்யம்பாளையம் சென்று வாக்களிக்க மாட்டோம். அதனால் தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம், அதனால் சாலை மறியலில் ஈடுபடுகிறோம் என தெரிவித்தனர்
தகவல் அறிந்த வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் தேர்தல் அலுவலரிடம் கூறி வாக்குச்சாவடி மையத்தை மாற்றித் தரமுடிந்தால் மாற்றித் தருவதாகக் கூறிய பிறகு மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். போளூா் டிஎஸ்பி நல்லு, காவல் ஆய்வாளா் கருணாகரன் மற்றும் போலீஸாா் வந்து போக்குவரத்தை சீா்படுத்தினா்.