தென் மாவட்டங்களில் களைகட்டும் தசரா திருவிழா: வியாபாரிகள் மகிழ்ச்சி
தென் மாவட்டங்களில் களைகட்டும் தசரா திருவிழா. விற்பனை அமோகம் என வியாபாரிகள் மகிழ்ச்சி.
HIGHLIGHTS
தமிழகத்தில் நடைபெறும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தசரா திருவிழா. தமிழகத்தின் தென் பகுதியான தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் ஆண்டுதோறும் தசரா பண்டிகை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு தசரா திருவிழாவிற்கு தடைவிதிக்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது.
ஆனால் தமிழக அரசு இதுகுறித்து தெளிவான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. கொடியேற்றம் நடைபெறும், ஒன்றாம் திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் நடைபெறும், பத்தாம் திருவிழா இரண்டிற்கும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றும் மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழக்கம்போல் ஆலயங்களுக்கு விதித்துள்ள தடைகள் தொடரும் என்றும் தெரிவித்தது. ஆனால் தசரா திருவிழாவிற்கு காப்பு கட்டி, மாலையணிந்து, வேடமிடும் பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே காப்பு கட்டி மாலை அணிந்து விரதமிருந்து வேடமணிந்து உள்ளூர்களில் உள்ள கோயில்களிலேயே தசரா பண்டிகையை கொண்டாடிக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது.
இந்த அனுமதியை தொடர்ந்து பக்தர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதீத ஆர்வத்துடன் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கினர். தசரா வேடம் அணியும் பக்தர்களுக்கு வேடம் கட்டுவதற்கு தேவையான பொருட்கள் கடைகளில் குவிந்துள்ளன.
காளி வேடம், அம்மன் வேடம், அரக்கன் வேடம், அனுமன் வேடம், பிள்ளையார் வேடம், முருகன் வேடம், சிவன் பார்வதி வேடம், அர்த்தநாரீஸ்வரர் வேடம், குரங்கு, கரடி, சிறுத்தை, மிக்கி மோஸ் போன்ற வேடங்களுக்கு தேவையான முகமூடிகள், சுடலைமாடசுவாமி வேடத்திற்கு தேவையான அங்கிகள், குல்லாக்கள், வல்லயம், சலங்கைகள், காளி வேடத்திற்கு தேவையான சூலம், ஈட்டி , வால் போன்ற தளவாட பொருட்களும், ஜடாமுடிகளும் பக்தர்களின் தேவைக்கு ஏற்றார்போல் தயார் செய்து வைத்துள்ளதாகவும், பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்வதாகவும், வியாபாரிகளும் பல பொருட்களை தயாரிக்கும் தொழிலாளிகளும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். வேடம் அணிவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அரசுக்கு நன்றியும் தெரிவிக்கின்றனர். வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் தசரா பண்டிகைக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளித்து ஆலயங்களுள் தரிசிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.