நெல்லை: முதாட்டி உடலை சாலையில் வீசி தீ வைத்து எரித்த வழக்கில் 2 பேத்திகள் கைது
நெல்லையில் பராமரிக்க முடியாத நிலையில் பாட்டியை தீ வைத்து எரித்து கொலை வழக்கில் அவரது 2 பேத்திகளை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
நெல்லை பேட்டை அருகே சாலை ஓரத்தில் பெண் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் பெண்ணின் உடலை சாலையில் வீசி சென்று தீ வைத்து எரித்த வழக்கில் அவரது பேத்திகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை பேட்டையில் இருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையில் ஆதாம் நகர் என்ற பகுதி உள்ளது. நெல்லை மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான குழாய்கள் ஆதம் நகர் எல்லை பகுதியில் உள்ள வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கே பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவது வழக்கம். இதன் காரணமாக குப்பை மேடாக அந்த பகுதி காட்சி அளித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மதிய வேளையில் அவ்வழியாக சென்ற ஒரு சிலர் சடலமொன்று சாலையின் ஓரம் எரிவதை கண்டு பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாதி எரிந்த நிலையில் உள்ள சடலத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில ஆட்டோவில் மர்ம நபர்கள் சிலர் ஒரு பெண்ணின் உடலை அந்தப்பகுதியில் வீசியதுடன் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தின் கழுத்தில் துணி ஒன்று இருக கட்டியிருததையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் ஆதம் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பழையபேட்டை கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரி மேரி ஆகியோர் அவரது பாட்டி சுப்பம்மாளை அழைத்து வந்ததை தெரிவித்தார்.
இதனடிப்படையில் மாரியம்மாள் மற்றும் மேரியை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் முதிய வயது காரணமாக பராமரிக்க முடியாத நிலையில் அவரை தீ வைத்து எரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பேட்டை காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.