பட்டணபிரவேச விவகாரம்: நெல்லையில் இந்து தேசிய கட்சியினர் நூதன போராட்டம்
நெல்லையில் ஆதீனகர்த்தர் போல் வேடமணிந்து பல்லக்கை சுமந்து வந்து இந்து தேசிய கட்சியினர் நூதன முறையில் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
வருங்காலங்களில் பட்டணபிரவேசம், தேரோட்டம் உள்ளிட்ட சமய நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க கூடாது என வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் வாயிலாக இந்து தேசிய கட்சியினர் மனு அளித்தனர். ஆதீனகர்த்தர் போல் வேடமணிந்து பல்லக்கை இந்து தேசிய கட்சி நிறுவனத் தலைவர் உள்ளிட்ட கட்சியினர் சுமந்து வந்து நூதன முறையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தருமபுர ஆதினத்தில் நடைபெறும் குரு பூஜையின் போது ஆதின மடாதிபதி பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மடாதிபதியை சிவபக்தர்கள் மற்றும் தொண்டர்கள் பல்லக்கில் சுமந்து செல்வது வழக்கம். இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் இயக்கங்கள் இந்து அமைப்பினர் மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், நேற்றைய தினம் தமிழக அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்றது.
இந்நிலையில் வருங்காலங்களில் ஆதினங்களில் நடைபெறும் பட்டணபிரவேசம் கோவில்களில் நடைபெறும் தேர்த்திருவிழா, சப்பர வீதிஉலா உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்க கூடாது என வலியுறுத்தி இந்து தேசிய கட்சியினர் மடாதிபதி போல் வேடமணிந்து, பல்லக்கை சுமந்து வந்து தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட வாயிலாக மனு அளித்தனர். இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 25 இன் படி மத்திய- மாநில அரசுகள் சமய வழிபாடுகளை தடை விதிக்கக் கூடாது எனவும், தொண்டர்களை கட்சித்தலைவர்கள் தோளில் சுமப்பது அவர்களது உரிமை. அதேபோல பக்தர்கள் குருமகாசன்னிதானத்தை சுமப்பதும் அவர்களது உரிமை என வலியுறுத்தியும் கூட்டணி கட்சியினருக்காக வருங்காலங்களில் இதுபோன்ற தடை உத்தரவை மாநில அரசு பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக முதலமைச்சருக்கு இந்து தேசிய கட்சியினர் மனு அளித்தனர்.