/* */

படிப்புக்கு பார்வையின்மை ஓர் தடையில்லை..திருநெல்வேலி சப்கலெக்டர் கோகுல் கடந்து வந்த பாதை..

திருநெல்வேலி மாவட்ட பயிற்சி சப் கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட கோகுல் ஒரு பார்வையற்றவர். படிப்புக்கு பார்வையின்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ள கோகுலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

HIGHLIGHTS

படிப்புக்கு பார்வையின்மை ஓர் தடையில்லை..திருநெல்வேலி சப்கலெக்டர் கோகுல் கடந்து வந்த பாதை..
X

கோகுலுக்கு வாழ்த்து தெரிவித்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு.

பாரம்பரியம் கொண்ட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வு இன்று ஓர் அற்புத நிகழ்வாக உருமாறியுள்ளது. ஆம்! இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பயிற்சிக்குப் பிறகு ஏதாவது ஒரு மாவட்டத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) பொறுப்பேற்று செயல்படுவது வழக்கம். அதன்படி, திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியராக (பயிற்சி) கோகுல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இது வழக்கமான நிகழ்வு.

ஆனால், அற்புதமான நிகழ்வு என்னவென்றால், உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட கோகுல் ஒரு பார்வையற்றவர் என்பதுதான். கண் பார்வையற்ற ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அவருக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வாழ்த்து தெரிவித்தார்.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகனான 26 வயது கோகுல் கண் பார்வையற்றவராக இருந்த போதிலும், முதுகலைப் படிப்பில் ஆங்கிலம் முடித்துள்ளார். அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியராக இன்று பணியை தொடங்கி உள்ளார் கோகுல்.

கோகுல் கடந்து வந்த பாதை:

நமது நாட்டில் உள்ள கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுவது இந்திய குடிமைப்பணி தேர்வு. எத்தனையோ பேர் அந்தத் தேர்வில் முயற்சி செய்து வெற்றி பெற முடியாத நிலையில் பார்வையற்றவரான கோகுல் சாதனை புரிந்து இன்று பணியை தொடங்கி உள்ளார்.

திருவனந்தபுரம் திருமலையைச் சேர்ந்தவர் கோகுல். இவரது தந்தை சுரேஷ்குமார் தேசிய மாணவர் படை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். தாய் சோபாகுமாரி திருவனந்தபுரத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த நிலையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான படிப்பை தொடர்ந்துள்ளார் கோகுல்.

இந்நிலையில், இந்திய குடிமைப் பணிக்கான தேர்வில் அகில இந்திய தரவரிசையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டுள்ளார். அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை ஐஏஎஸ் அதிகாரிகள் கையாளும் முறையை கோகுல் அறிந்துள்ளார். வயநாட்டில் ஆட்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல இளம் ஐஏஎஸ் அதிகாரிகளே முன்வந்து செயல்பட்டுள்ளனர். மேலும், ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி 24 மணி நேரமும் வேலை செய்துள்ளார். அதுவே கோகுலுக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கேற்று அகில இந்திய அளவில் 804 ஆவது இடத்தைப் பெற்றார் கோகுல். ஒரு பிரத்யேக கால அட்டவணையைப் பின்பற்றுதல், கற்றல் இலக்குகள் மற்றும் சரியான பொருட்களிலிருந்து படிப்பது ஆகிய மூன்று பகுதிகளிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற முடியும் என கோகுல் தெரிவித்துள்ளார்.

தேர்வில் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்தை முதலில் உடைக்க வேண்டும். படிப்பு விவரங்களை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எந்தவொரு தலைப்பு கொடுக்கப்பட்டாலும் அது குறித்து விரிவாக எழுதுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி தங்களுக்குள் டெஸ்ட் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

இந்திய குடிமைப் பணி தேர்வில் முக்கியமானது நேர்காணல். அதை முறியடிப்பது மிகவும் கடினமானது. நேர்காணலில் கேட்கப்படும் கேள்வியை நன்கு புரிந்து கொண்டு அது குறித்து விரிவான மற்றும் சரியான பதிலை அளிக்க வேண்டியது அவசியம் என கோகுல் தெரிவித்துள்ளார்.

பிறவியிலேயே பார்வையற்றவரான கோகுல் இன்று ஓர் ஐஏஎஸ் அதிகாரி என்பது எளிதில் நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாகும். படிப்புக்கும், வாழ்வில் முன்னேறுவதற்கும் பார்வையின்மையோ, உடல் குறைபாடோ ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் கோகுல்.

தனது வாழ்க்கைப் பாதையில் கடினமான சூழல்களை எதிர்கொண்டு அவற்றை சுமையாக கருதாமல் எளிதாக எடுத்துக் கொண்டு பல தடைகளை கடந்து வந்து நம் முன் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்து நிற்கும் கோகுலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Updated On: 7 Nov 2022 4:18 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்