பாலாமடையில் ரேஷன் கடை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் தர்ணா
பாலாமடை கிராம மக்கள் தங்கள் ஊரில் ரேஷன் கடை அமைத்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம்.
HIGHLIGHTS
நெல்லையில் ரேஷன் கடைக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டி இருப்பதால் தங்கள் வசிக்கும் பகுதியிலையே ரேஷன் கடை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
நெல்லை மாவட்டம் பாலமடை கிராமத்தில் அம்மன் கோவில் தெரு மற்றும் இந்திரா நகர் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் மாதம்தோறும் அதிக தூரம் அலைந்து ரேஷன் பொருள் வாங்கி வருவதால் சிரமம் ஏற்படுகிறது. எனவே தாங்கள் வசிக்கும் பகுதியிலையே தங்களுக்கு ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என்றும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கண்ட இரண்டு தெருவை சேர்ந்த பொதுமக்களும் இன்று கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத அரசை கண்டித்து அனைவரும் குடும்ப அட்டையை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக கைகளை உயர்த்திக் காட்டினர் இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.
மேலும் இதுகுறித்து பொதுமக்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், மாதம்தோறும் 2 கிலோ மீட்டர் தூரம் அலைந்து ரேஷன் பொருள் வாங்க வேண்டியுள்ளது. எங்கள் பகுதியில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் ரேஷன் கடை கட்டி தர வேண்டும் என்று ஏற்கனவே வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முதல்வர் தனிப்பிரிவு ஆகிய இடங்களில் மனு அளித்துள்ளோம். இருப்பினும் தற்போது வரை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே உடனடியாக எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும், இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டம் இருக்கும் என்று தெரிவித்தனர்.