தூத்துக்குடியில் கொலை முயற்சி, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கநாயக்கன்பட்டி பகுதியில் வைத்து, அக்கநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவரான அக்கநாயக்கன்பட்டி தெற்கு காலனியை சேர்ந்த அய்யாத்துரை (வயது 67) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (27) என்பவரை புளியம்பட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், கைதான ரஞ்சித் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த ஜெபராஜ் (வயது 28) என்பவரை தென்பாகம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். கைதான ஜெபராஜ் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், இருவர் மீதும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், கொலை முயற்சி வழக்கில் கைதான அக்கநாயக்கன்பட்டி தெற்கு காலனியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் கஞ்சா வழக்கில் கைதான தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனி பகுதியை சேர்ந்த ஜெபராஜ் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், ரஞ்சித் மற்றும் ஜெபராஜ் ஆகியோரை சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 43 பேர் உட்பட 265 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.