தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் 538 பேருக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல்.. எஸ்.பி. உத்தரவு…
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வு மூலம் 538 பேருக்கு இடமாறுதல் வழங்கி காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு இடமாறுதல் வழங்குவது தொடர்பாக மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற்றது.
இடமாறுதல் கேட்போரிடம் நேரடியாக கேட்டு, காவல் நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று பொதுமாறுதல் வழங்கினார். கடந்த 19.12.2022 அன்று முதற்கட்டமாக 271 காவல்துறையினருக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி ஊரகம், கோவில்பட்டி, மணியாச்சி, விளாத்திகுளம் உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 3 ஆண்டுகள் பணி முடித்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை உள்ளவர்கள் மற்றும் விருப்பத்தின்பேரில் பணி மாறுதல் கேட்டிருந்தவர்கள் என 267 காவல்துறையினருக்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, காவல் துணை கண்காணிப்பாளர்கள் சத்தியராஜ், மாயவன், வெங்கடேஷ், லோகேஸ்வரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட காவல் அமைச்சு பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், செல்வக்குமார் உள்ளிட்ட உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் முன்பு கலந்தாய்வு நடைபெற்றது. காவல்துறையினரின் விருப்பங்களை நேரடியாக கேட்டறிந்து காவல் நிலையங்களில் ஏற்கெனவே காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போது மாறுதலாகி செல்லும் காலிப்பணியிடங்களையும் கணக்கிட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 538 காவல்துறையினருக்கு பணி மாறுதல் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.