தூத்துக்குடி மாவட்டத்தில் மரணமடைந்த காவல் துறையினரின் வாரிசுகள் 3 பேருக்கு அரசு வேலை...
தூத்துக்குடி மாவட்டத்தில் மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கினார்.
HIGHLIGHTS
தமிழக காவல் துறையில் பணிபுரிவோர், பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேர்ந்தால் அவர்களது வாரிசுதாரர்களுக்கு பல்வேறு உதவிகள் அரசின் தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்த காவல் துறையினரின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படுவதும் உண்டு.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணி அலுவலர்கள் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என தமிழக அரசிற்கு மாவட்ட காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.
அதன் மூலம் காவல்துறையில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் (Data Entry Assistant-Recepionist) பதவிகளில் தமிழக அரசு பணி நியமனம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, பணி வழங்கப்பட்ட 3 பேருக்கு அரசு பணிக்கான ஆணையை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று வழங்கினார். மேலும், அவர்களுக்கு ஆறுதல் கூறிய காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் 3 பேரின் பணி சிறக்கவும் வாழ்த்தினார். நிகழ்ச்சியின்போது, மாவட்ட காவல்துறை அலுவலக அமைச்சுப்பணி உதவியாளர் கிருஷ்ணம்மாள் உடனிருந்தனர்.
3 பேர் யார்?:
தமிழக காவல்துறையில் பணியில் இருக்கும் போது மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மனைவி சுமதி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மகன் பிரவான், தலைமைக் காவலர் பாலசுப்பிமணியன் மகள் சுருதிலெட்சுமி ஆகிய 3 பேருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பணி ஆணையை வழங்கினார்.