திருவாரூர் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி
திருவாரூர் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
HIGHLIGHTS
திருவாரூர் அருகே விளமல் தனியார் அரங்கில் இன்று தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக மகளிர் சுய உதவிக் குழு சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை ஆட்சியர் காயத்ரி மற்றும் திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் கைவினை பொருட்கள், உணவு பொருட்கள் ஆகிய உற்பத்தி செய்த பொருட்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1029 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 30கோடியே 95லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை ஆட்சியர் காயத்ரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகிய இருவரும் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, கொரடாச்சேரி ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.