திருவாரூரில் வெளி மாநில நெல் கொள்முதல்: கண்டறிய 8 குழுக்கள் அமைப்பு
அரசு கொள்முதல் நிலையங்களில், வெளி மாநில நெல் மூட்டைகளை கண்டறிய, 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
காவிரி டெல்டா மாவட்டங்களில், அரசு கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல் கொள் முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழக அரசு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய இணையதளம் மூலம் பதிவு செய்யும் வசதியை கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் வியாபாரிகள் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வரும் நெல்லை கண்டறிந்து பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நெல்லை, இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளின் இடையூறு இல்லாமல், விவசாயிகளே கொள்முதல் செய்ய ஏதுவாக, இணையத்தள கொள்முதல் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்களது நெல்லை விற்பனை செய்யலாம்.
வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லை பறிமுதல் செய்ய 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மாவட்டம் முழுவதும் அரசு கொள்முதல் நிலையங்ளில் வியாபாரிகளின் 649 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லை, லாரிகளுடன் பிடிக்க, சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.