முதியோர் உதவித்தொகை பெற பல மாதங்களாக காத்திருக்கும் மக்கள்
புரோக்கர்களின் பிடியில் தாலுகா அலுவலகங்கள்: கலெக்டர் முரளிதரன் கவனிப்பாரா?
HIGHLIGHTS
முதியோர், ஆதரவற்றோர், விதவை உதவித்தொகை பெற காத்திருக்கும் முதியோர்களின் கோரிக்கையை தேனி மாவட்டத்தில் ஆட்சியர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்
தேனி மாவட்டத்தில் முதியோர், ஆதரவற்றோர், விதவை உதவித்தொகைகள் வழங்குவது சில ஆண்டுகளாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உதவித்தொகை பெறுபவர்களில் யாராவது இறந்தால் மட்டுமே விண்ணப்பித்து காத்திருப்பவர்களில் சீனியாரிட்டி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதாவது, உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடாமல் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது. ஆனால், எப்படியாவது உதவித்தொகை பெற நினைப்பவர்கள் இடைத்தரகர்களை அணுகி 'கவனித்த" வுடன், குறிப்பிட்ட மாதமே உதவித்தொகை கிடைக்கக்கூடிய அதிசயம் நடைபெறுகிறது.
இதனால், உதவித்தொகை பெறுவது இடைத்தரகர்கள் இல்லாமல் சாத்தியமில்லை என்ற எண்ணத்தை ஏழை எளிய முதியோர்களிடம் உருவாக்கி விட்டனர். உண்மையில் தகுதியுள்ள ஏழை பயனாளிகள் பலர், உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இந்த பிரச்னையில் நேரடியாக தலையிட்டு, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை அடியோடு அகற்றினால் மட்டுமே தகுதி உள்ள பயனாளிகளுக்கு உண்மையான பலன் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தேனி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் இடைத்தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளதால், முதியோர், விதவை, ஆதரவற்றோர் உதவித்தொகை பெற சுமார் 10 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டியுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி.