தஞ்சாவூரில் சாவிலும் இணை பிரியாத தம்பதி
தஞ்சாவூரில் மனைவி இறந்த துக்கம், தாங்காத கணவரும இறந்தார்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் கரந்தை நாராயணன் கொத்தன் தெருவை சேர்ந்தவர் மருதையா (வயது 75). இவருடைய மனைவி ஜெயா (70). இவர்களுக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி மூன்று மகள்கள் ஒரு மகன் மகன் உள்ளனர்.
சமையல் வேலை செய்து வந்த அவர்கள் வயது மூப்பு காரணமாக வேலைக்கு செல்லாமல் தனது மகள் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஜெயா வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனை பார்த்து மருதையா மிகவும் மன வேதனை அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை ஜெயா திடீரென இறந்துவிட்டார். இதையறிந்த மருதையா அதிர்ச்சி அடைந்தார். ஜெயா இறந்த தகவலை அவரது மகள் உறவினர்களுக்கு தெரிவித்தார். அவர்களும் வந்து அடுத்த இறுதி சடங்களுக்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
மனைவி இறந்ததால் மன வேதனையில் இருந்த மருதையா யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். திடீரென இரவு 9 மணி அளவில் மருதையா மூச்சு பேச்சு இன்றி மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் எழுப்பிய போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. மனைவி இறந்த சில மணி நேரத்திலேயே கணவர் இறந்தது உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 40 ஆண்டுக்கு மேல் இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதி சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.