கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகரிப்பு: தஞ்சாவூர் அருகே கல்லணையில் அரசுச்செயலர் ஆய்வு
உபரிநீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை முதல் 115000 கன அடி வரை திறந்து விடப்பட்டுள்ளது
HIGHLIGHTS
காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் கனமழைகாரணமாக கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் மாவட்டகண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசுமுதன்மைச் செயலாளர் டான்சி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். விஜயகுமார் ,மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப் படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மை செயலாளர், டான்சி நிர்வாக இயக்குனர் டாக்டர். எஸ்.விஜயகுமார் தெரிவித்ததாவது: காவிரிநீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதையும், கும்பகோணம் ஊராட்சிஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் வெள்ளப் பேரிடர் பாதுகாப்பு மையத்தையும் நேரில் பார்வையிட்டுஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை முதல் 1.50 லட்சம் கனஅடி வரை திறந்து விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரிமற்றும் கொள்ளிடக் கரையோரங்கள் மற்றும் தாழ்வானபகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் (24 x 7) இயங்கி வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362-264115 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை,வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்தி டலாம் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் டான்சி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். விஜயகுமார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஊராட்சி ஒன்றியம், கடுவெளி ஊராட்சியில் செயல்பட்டு வரும் பொது விநியோக திட்ட அங்காடியில் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும், வடுகக்குடி வடக்கு ஊராட்சியில் ரூபாய் 3 இலட்சம் மதிப்பீட்டில் மாதாகோவில் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும்,
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் அனைத்து கிராமஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 4.67 இலட்சம் மதிப்பீட்டில் கொரநாட்டுக் கருப்பூர் ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி குறித்தும்,கும்பகோணம் மாநகராட்சியில் கலைஞர் நகரப் புறமேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 117 இலட்சம் மதிப்பீட்டில் தாமரைக் குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும்,ரூபாய் 150 லட்சம் மதிப்பீட்டில் கும்பகோணம் ஆனைக்காரன்பாளையம் மயானத்தில் நவீன எரிவாயு எரிவாய் தகனமேடை அமைக்கும் பணி குறித்தும், கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்
இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என். ஓ. சுகபுத்ரா, கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, நீர்வளத்துறை காவிரி வடிநிலகோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவிபொறியாளர்கள் பூங்கொடி, ராஜ்குமார், கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.