ஆக்ஸிஜன் படுக்கை - இரவு முழுவதும் காத்திருக்கும் நோயாளிகள்.
தீவிரமடையும் கொரோனா தொற்று.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 32,903 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27,637 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்பொழுது 4,891 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டுமே 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் 1,250 உள்ள நிலையில் அனைத்தும் நிரம்பிவிட்டதால், புதிய தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் படுக்கைகள் இல்லாததால் வாகனங்களிலே காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு வந்த நோயாளிகள் இரவு முழுவதும் வெளியில் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பழைய நோயாளிகளின் படுக்கைகள் காலியான பிறகு அவர்களுக்கு இடம் கிடைப்பதாகவும், இதனால் சுமார் 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக உறவினர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 1,250 படுக்கைகள் உள்ளதாகவும், அது இன்னும் இரண்டு நாட்களில் நிரம்பி விட்டால் தஞ்சை மாவட்டத்தின் நிலைமை மோசமாகிவிடும் என நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.