மது போதையில் ஐந்தருவி பாலத்தில் பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்
குற்றாலம், ஐந்தருவி பகுதியில் மது போதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மரணம்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து உள்ளது. தற்போது தொடர் விடுமுறை உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு குளிக்க வருகை தருகின்றனர். இந்நிலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுதிகளிலும், சாலை ஓரங்களிலும் தங்குகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வடதிட்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார் நண்பர்களுடன் குளிப்பதற்காக ஐந்தருவி பகுதிக்கு சென்றுள்ளார் அங்கு இரவு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மதுபோதையில் இருந்த குமார் அங்குள்ள பாலத்தின் மீது ஏறி படுத்துள்ளார். அப்போது தடுமாறி பாலத்தின் கீழே விழுந்து, தலையில் அடிபட்டு அதே இடத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.
குமாரை காணாததால் நண்பர்கள் தேடியுள்ளனர். அதிகாலை பாலத்தின் அடியில் இறந்த நிலையில் குமார் கிடப்பதை கண்டு குற்றாலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து செங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் குமாரின் சடலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கூலி வேலை செய்து வரும் குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.