வாக்கு எண்ணும் மையம் அருகே கண்டெய்னர்- போலீஸ் விசாரணை
தென்காசியில் வாக்கு எண்ணும் மையம் அருகே கண்டெய்னர் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளான சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி ஆகிய 5 தொகுதிகளின் வாக்கு பெட்டிகள் தென்காசி அருகே கொடிக்குறிச்சியிலுள்ள கல்லுாரி வளாகத்தில் வைத்து எண்ணப்பட உள்ளது. அதற்காக 3 அடுக்கு பாதுகாப்பில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த கல்லூரி வளாகத்திற்கு அருகே சுமார் 100 மீட்டர் வட்டத்திற்குள் தனியார் இடத்தில் புதிதாக இன்று காலை கண்டெய்னர் ஒன்று நின்று கொண்டிருந்தது.
இதனை கண்ட திமுக மற்றும் சில கட்சியினர் இது குறித்து காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். இதில் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடுகள் கட்டி விற்க ஆயத்த பணிகளை செய்ய ஆட்கள் தங்கவும் பொருட்களை வைக்கவும் கண்டெய்னர் கொண்டு வந்துள்ளதாக கூறி உள்ளனர். உடனே கண்டெய்னர்களை அகற்றுமாறு போலீசார் கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.