தென்காசி மாவட்டத்தில் மருத்துவ கழிவு கொட்டிய ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு மாவட்ட ஆட்சியர் தகவல்
கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் தொடர்பாக இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் தொடர்பாக இதுவரை 9 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்
தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் தமிழ்நாடு கதர் கிராம தொழிலாளர் வாரியம் சார்பில் காதி கிராப்ட் அங்காடி துவக்க விழா நடைபெற்றது.
காதிகிராப் அங்காடி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
தென்காசி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லை பகுதியான புளியரையில் 3 சோதனை சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சோதனை சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் தொடர்பாக இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் செயற்பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாலும் தொடர்ந்து வழக்குப்பதிவுகள் நடைபெறுவதாலும் தற்போது கழிவுகள் கொண்டு வரப்படுவதில்லை.
அதே போன்று தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம், கீழப்பாவூர் பகுதிகளில் காய்ச்சல் பரவல் அதிகமாக காணப்பட்டு வந்தது. இதன் விளைவாக அனைத்து வட்டாரங்களிலும் சுகாதாரத் துறை சார்பில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. அந்த அடிப்படையில் தற்போது மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.