குற்றாலத்தில் தாறுமாறாக பைக் ஓட்டியவருக்கு அபராதம் வாகனம் பறிமுதல்
குற்றாலத்தில் அபாய முறையில் இருசக்கர வாகனம் ஓட்டிய நபருக்கு அபராதம் இருசக்கர வாகனம் பறிமுதல்
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் குற்றாலம் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவநிலை காலங்களாகும்.
இந்தக் காலநிலையில் மெல்லிய சாரல் மழையுடன் இதமான தென்றல் காற்று வீசும் இந்த பருவநிலையை அனுபவிக்க வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
அதேபோல் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்குள்ள அருவிகளில் புனித நீராடி இப்பகுதியில் இருக்கும் அனைத்து கோவிலுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து அதன் பின்னர் சபரிமலை செல்வார்கள்.
தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் காலை மாலை நேரங்களில் அதிகமான ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் புனித நீராடி வருகின்றனர். அதே சூழ்நிலையில் சிலர் இரு சக்கர வாகனங்களில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்வதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் குற்றாலம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் அபாயகரமான முறையிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமான தலைக்கவசத்தை அணிந்து கொண்டு அடையாளம் தெரியாத நபர் சுற்றி வருவதாகவும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குற்றாலம் காவல்துறையினர் அப்பகுதி CCTV கேமராக்களை சோதனை செய்ததில் அது தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் (23) என தெரியவந்தது, இது குறித்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூபாய் 10,000 அபராதம் விதித்து மேற்படி இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.