குற்றாலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதியில்லை -ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி : குற்றாலத்திற்கு சுற்றுலா செல்வதற்கு எந்த ஒரு தளர்வுகளும் அளிக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
குற்றாலத்திற்கு சுற்றுலா செல்ல எவ்வித தளர்வுகளும் அளிக்கப்படவில்லைஎன தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்புப்பணி குறித்தும், அரசு அலுவலர்கள் மேற்கொண்டுள்ள பணிகள், மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-
தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். அரசு கொடுத்துள்ள தளர்வுகள் முழுமையாக அமுல்படுத்தபடும், அதனை கண்காணிக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுற்றுலாத்தலமான குற்றாலம்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தற்போது எவ்வித தளர்வுகளும் வழங்கப்படவில்லை.
அவசர காரணங்களுக்காக பயணிக்க ஆட்சியரிடம் இருந்து இ - பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும். பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு,கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும்,நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவும், மக்கள் அனைவரும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி முழு ஒத்துழைப்பு தரும்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.