இராமேஸ்வரத்தில் விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடை காலம் துவக்கம்
தமிழக அரசு அறிவித்தபடி இராமேஸ்வரத்தில் விசைப்படகுகளுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.
HIGHLIGHTS
தமிழகத்தில் நலிந்துவரும் கடல் வளத்தை காக்கவும், அழிந்துவரும் மீன் வளத்தை பெருக்கவும் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. அரசு அறிவித்த இந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்பதால் மீனவர்களும் இதில் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொள்கின்றனர். கடலில் எல்லை பிரச்சனை, இலங்கை கடற்படையின் தாக்குதல்கள், சிறைபிடிப்பு, படகுபறிமுதல், பறிமுதல்செய்யப்பட்ட படகுகளை இலங்கைஅரசு அரசுடைமையாக்கி ஏலம் விடும் கொடுமை, இவற்றால் மீன்பிடிக்கச்செல்ல முடியாத நிலையில், இவற்றை எதிர்த்து தொடர் போராட்டங்கள் என மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நாட்கள் குறைந்ததால் வருவாய் இழந்து தவிக்கும் மீனவர்கள் இந்த மீன்பிடி தடை காலத்தில் மேலும் வருவாய் இன்றி தவிக்க நேரிடும் என்பதால் அரசு வழங்கும் தடைக்கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதை தடை காலத்திற்கு முன்பாகவே மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தடைக்காலம் தொடங்குவதால் இராமேஸ்வரத்தில் மீனவர்கள் படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.