2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
பாம்பன் பகுதியில் விற்பனை செய்ய பதுக்கிய 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்- 4 பேர் தப்பி ஓட்டம்.
HIGHLIGHTS
இராமேஸ்வரம் தீவு பகுதிகளில் அரசு மதுபான கடைகளை திறக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்திரவிட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே ராமேஸ்வரம் தீவுக்குள் சிலர் பாம்பன் மற்றும் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக்கடையில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து அதனை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய மதுபாட்டில்களை சிலர் பாம்பன் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக பாம்பன் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாம்பன் காவல் நிலைய ஆய்வாளர் உத்தரவின் பெயரில் பாம்பன் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் இன்று பாம்பன் பகுதி முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாம்பன் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள தகர செட்டில், கள்ளசந்தையில் விற்பனை செய்வதற்காக பாம்பன் டாஸ்மார்க் கடையில் இருந்து மொத்தமாக மது பாட்டில்கள் வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்த 4 பேர் தப்பி ஓடினர். பின்னர் அங்கிருந்த 2111 மது பாட்டில்களை பறிமுதல் செய்த பாம்பன் காவல் நிலைய போலீசார் தப்பியோடிய நால்வரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.